தீபாவளி பரிசு: 12 ஊழியர்களுக்கு கார் வழங்கி இன்ப அதிர்ச்சி தந்த ஹரியாணா நிறுவனர்!

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு கார் வழங்கிய ஹரியாணா நிறுவனர்.
தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு கார் வழங்கிய ஹரியாணா நிறுவனர்.
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரியாணா மாநிலத்தில் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக டாடா பன்ச் கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு யாருமே எதிர்பார்க்காத பரிசுகளையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றன. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் எம்.கே.பாட்டியா என்பவர் தனது ஊழியர்களுக்குத் தீபாவளி பரிசாக கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்தின் பெயர் மிட்ஸ்கார்ட் ஆகும். எம்.கே.பாட்டியா இதை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியதாக தெரிகிறது. இவர் கடந்த மாதமே கார்களை பரிசாக கொடுத்துவிட்டார். எம்.கே.பாட்டியா தனது ஊழியர்களுக்கு கார் சாவியை வழங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பேசிய அவர், "என்னுடைய ஊழியர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் என்னை வியக்க வைப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே நான் அவர்களுக்குச் சிறப்புப் பரிசை கொடுக்க முடிவு செய்தேன். சிறப்பாக வேலை செய்யும் 12 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கினேன். விரைவில் 50 பேருக்கு கார் வழங்க முடிவு செய்துள்ளேன்” என்றார் புன்னகையுடன். பாட்டியா தனது ஊழியர்களுக்கு டாடா பன்ச் (Tata Punch) காரை பரிசாகக் கொடுத்துள்ளார். டாடா பன்சின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் என்பது ஆகும். டாடா பன்ச் கடந்த 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மைக்ரோ எஸ்யூவி மாடல் காராகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in