

மும்பை: இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு சுமார் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி அண்மையில் சொல்லியிருந்தார். இந்த சூழலில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அவரது மனைவி சுதா மூர்த்தி.
நாராயண மூர்த்தியின் கருத்துக்கு இந்திய இளைஞர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நலனில் கவனம் செலுத்தி வருபவர்கள் என பெரும்பாலானோர் எதிர்ப்பு எழுந்தது. தற்போது உள்ள பணி சூழல், ஆரோக்கிய நலன், ஊழியர்களுக்கான ஊதியம், முதலாளித்துவம், உழைப்பு சுரண்டல் போன்றவற்றை முன்வைத்து சமூக வலைதளங்களில் கருத்துகள் வைரலாக வலம் வந்தன. அதே நேரத்தில் சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
“அவர் கடின உழைப்பை நம்புபவர். அதற்கான வேட்கை அவருக்குள் இருந்தது. வாரத்துக்கு சுமார் 80 அல்லது 90 மணி நேரம் வரை உழைத்தவர். அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அதனால் அவர் தனது சொந்த அனுபவத்தை சொல்லி இருந்தார்” என சுதா மூர்த்தி தெரிவித்தார்.