Published : 29 Oct 2023 08:12 AM
Last Updated : 29 Oct 2023 08:12 AM

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.60-க்கு விற்பனை

சென்னை: வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது.

தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 30.41 சதவீதம் மகாராஷ்டிர மாநிலத்தில் விளைகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா 15.51 சதவீதம், மத்திய பிரதேசம் 13.66 சதவீதம் விளைவிக்கிறது. தமிழகம் 1.65 சதவீத விளைச்சலுடன் 13-வது இடத்தில் உள்ளது.

இதனால் தமிழகத்தின் வெங்காய தேவைக்கு மகாராஷ்டிர மாநிலத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை மகாராஷ்டிர மாநிலத்தில் காலத்தோடு பெய்யாத நிலையில், காரிப் பருவத்தில் ( ஜூலை - ஆகஸ்ட் ) வெங்காயம் நடவு நடைபெறவில்லை. அதனால் அக்டோபர் மாதம் வெங்காய அறுவடை நடைபெறாததால், சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கிலோ ரூ.42 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. வெளி சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வெங்காய வியாபாரிகள் கூறும்போது, "வெங்காய வரத்து குறைவால் சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை விடுவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்த சில தினங்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x