Published : 10 Jan 2018 12:54 PM
Last Updated : 10 Jan 2018 12:54 PM

இந்தியப் பொருளாதாரம் மீண்டெழும்; 2018 -19 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.3 % ஆக அதிகரிக்கும்: உலக வங்கி கணிப்பு

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருக்கும் எனவும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என ஆறு மாதங்களுக்கு முன், உலக வங்கி மதிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் உலகளாவிய பொருளதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"இந்தியாவில் புதிய வரி முறையான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது மிகப்பெரிய பொருளாதார மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக சில பாதிப்புகள் இருந்தன. பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால், வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருக்கும். 2017 -18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜிடிபி 6.7 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது.

2018 -19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக அதிகரிக்கும். 2019 -20 நிதியாண்டில் இது 7.5 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது. உலகளாவிய முதலீடுகளும் அதிகரிக்கும். இதனால் பொருளாதரம் வேகமெடுக்கும். பல உலக நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே இருக்கும்.

சீனாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும். அதே சமயம் அடுத்த நிதியாண்டில் இது, 6.5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. உலக முழுவதும் பொருளாதார பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு பொருளாதாரம் பெருமளவு சீரடையவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x