Published : 04 Jan 2018 10:32 AM
Last Updated : 04 Jan 2018 10:32 AM
நடப்பு நிதி ஆண்டில் (2017-18) ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ 3,579 கோடியாக இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலமான கேள்விக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:
நடப்பு ஆண்டில் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 3,579 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ. 3,643 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியாவின் செயல்பாட்டு லாபம் ரூ 531 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். முந்தைய நிதி ஆண்டில் (2016-17) நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.215 கோடியாக இருந்தது.
நிதி ஆயோக் அளித்த பரிந்துரையில், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு தொடர் நஷ்டத்திலிருந்து வெளியேறுமாறு குறிப் பிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் அதன் மொத்த கடன் சுமை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு தொடர்ந்து நிதி உதவி அளித்து அதை செயல்பட வைப்பதானது மிகவும் சரியான நடவடிக்கையாக இருக்காது. மக்களின் வரிப்பணம் ஏர் இந்தியா போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீரமைக்க பயன்படுத்துவது சரியான செயலாக இருக்காது என்று நிதி ஆயோக் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூடி ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் 5 துணை நிறுவனங்களையும் பங்கு விலக்கல் மூலம் விற்கலாம் என பரிந்துரைத்தது. இதனிடையே ஏர் இந்தியா நிறுவனம் 33 சொத்துகளை விற்பதற்காக அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -ஐஏஎன்எஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT