Published : 20 Dec 2017 10:46 AM
Last Updated : 20 Dec 2017 10:46 AM
எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு சலுகை அளிக்க உள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைக்கும் இந்த சலுகை அளிக்கப்படும்.
இந்த தகவலை நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று தெரிவித்தார். குறிப்பாக குறைவான சாலை வரி போன்ற சலுகைகள் அளிப்பதன் மூலம் இந்தியாவில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் ஆட்டோமொபைல் துறை தொடர்ச்சியாக மிக அதிக பங்களிப்பை அளிக்கும் என்றார்.
தொழில்துறை அமைப்பான அசோசேம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசுகையில் இதனைக் கூறினார். அவர் மேலும் பேசியதாவது, ஆட்டோமொபைல் துறை, பேட்டரி உற்பத்தி மற்றும் சார்ஜிங் மைய உருவாக்கம் போன்றவற்றில் இந்தியா சிறந்து விளங்க வேண்டும். இதன் மூலம் நகரங்களின் காற்று மாசு அளவைக் குறைக்கலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு குறைவான சாலை வரி விதிப்பதன் மூலம் மூலம் அதன் முயற்சிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை செய்யும் துறையாக ஆட்டோமொபைல் உள்ளது. இந்திய ஜிடிபி-யில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு 7.2 சதவீதமாக இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார்.
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் 2027-28-ம் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் பேட்டரிகளின் விலை ஒரு கிலோவாட் 273 டாலரிலிருந்து 73 டாலராக குறைந்திருக்கும். இது இந்தியாவின் தேவை தாண்டிய விலையாகும். இந்திய தேவையை கருத்தில் கொண்டால் ஒரு கிலோ வாட் விலை 60 டாலராக மேலும் குறைவாக இருக்கும். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT