Published : 16 Dec 2017 09:49 AM
Last Updated : 16 Dec 2017 09:49 AM
இந்தியாவில் உள்ள சிறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன என்று விஜய் மல்லையா வின் வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் சென்னை புழல் சிறையின் மோச மான நிலை குறித்தும் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசை கேட்டுக்கொண்டது. இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை கைது செய்தனர். பின்னர் 6,50,000 யூரோ பிணைத்தொகை செலுத்தியதன் அடிப்படையில் ஜாமீனில் நீதிமன்றம் விடுவித்தது.
மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் மனு மீதான விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி, இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலை குறித்தும், அங்கு கைதிகளை நடத்தும் விதம் குறித்தும் வாதங்களை எடுத்து வைத்தார்.
மேலும், ஐரோப்பிய யூனியனுக்கான கைதிகள் சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினரான ஆலன் மிச்சேல் இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 இங்கிலாந்து நாட்டினர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 29 நபர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் ஒருவரை சந்தித்து திரட்டிய விவரங்களை மிச்சேல் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து மிச்சேல் கூறுகையில், ‘‘புழல் சிறையில் எலிகள், கரப்பான் பூச்சிகள், பாம்புகளுடன் வாழ்ந்ததையும், மிகச்சிறிய அறையில் மிகமோசமான நிலையில் இருக்க நேர்ந்ததையும் அவர் என்னிடம் கூறினார். மேலும், உணவும், மருத்துவ சிகிச்சையும் கிடைக்காமல் அவதிப்பட்டதையும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படாதது பற்றியும் தெரிவித்தார். இதுபோலவே மும்பை ஆர்தர் ரோடு சிறையிலும், அலிப்பூர் சிறையிலும் மோசமான நிலை இருப்பதையும் அறிய முடிகிறது’’ எனக் கூறினார்.
வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி கூறுகையில் ‘‘ இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியா செல்வதற்கு விஜய் மல்லையா தயக்கம் காட்டுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் சிறையில் அடைக்கப்பட்டால் உரிய மருத்துவ உதவியும் கிடைக்காமல் போகக்கூடும் என்ற கவலை உள்ளது’’ போன்ற வாதங்களை முன்வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT