Published : 08 Dec 2017 10:29 AM
Last Updated : 08 Dec 2017 10:29 AM
சர்வதேச அளவில் முன்னணி எலெக்ட்ரிக் நிறுவனமான ஜிஇ, 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணிநீக்கம் மின்சார தொழில்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்கள் செலவுகளை குறைக்கும் விதமாகவும், நஷ்டத்தை குறைக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ஜிஇ பவர் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதமாக இருக்கும். அதிகாரிகள் மற்றும் உற்பத்தி தொழிலாளர்கள் என அனைத்து மட்டத்திலும் ஆட்குறைப்பு செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்காவுக்கு வெளியே இந்த வேலை நீக்கம் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த முடிவு வருத்தமானதுதான் என்றாலும் ஜிஇ பவர் நிறுவனம் சந்தையில் தொடர்ந்து நிலைத்திருக்க இந்த முடிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2018-ம் ஆண்டுக்குள் மின்சாரத் தொழில் முன்னேற்றமடையும், ஆனாலும் சந்தை சவால்கள் தொடரும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை 2019-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று ஜிஇ பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ருஸ்செல் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவிடப்படும் தொகையை மறு மதிப்பீடு செய்ய உள்ளது. மேலும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளையும் ஜிஇ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் பிளானெரி மாற்றி அமைத்துள்ளார். -புளூம்பெர்க்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT