Published : 09 Dec 2017 10:10 AM
Last Updated : 09 Dec 2017 10:10 AM
இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் 2018-ம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி 7.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. மேலும் 2019-ம் ஆண்டில் 7.7 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் எனவும் மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
இது குறித்து மார்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கிறது. இது அடுத்த ஆண்டில் 7.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளின் நிதி நிலை அடிப்படைகளில் முன்னேற்றம் தெரிகிறது. மேலும் நிதி அமைப்புகள் வலுவடைந்து வருகிறது. இதனால் முதலீடுகளும் தேவைகளும் அதிகரிக்கும். தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. 2018-ம் ஆண்டில் முழுவதுமாக மீண்டு விடும்.
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் முதலீடு மற்றும் தேவைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் நுகர்வு மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும்.
பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்ய முடிவெடுத்திருப்பது வங்கிகளின் ரிஸ்க்கை குறைத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். மேலும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT