

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் 3 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்வடைந்து 65,220 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்ந்து 19,396 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கின. காலை 10:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84.21 புள்ளிகள் உயர்வடைந்து 65,300.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 19.00 புள்ளிகள் உயர்ந்து 19,412.60 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல், அமெரிக்க வட்டி விகிதம் உயர்வு, தொடர் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் போன்றவைகள் குறித்த அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் லாப ஈட்டுவதில் முனைப்பு செலுத்தினர். இதனால் ஏற்ற இறக்கத்துடன் பயணித்த இந்திய பங்குச்சந்தைகள் லாபத்தை பதிவு செய்யத் தவறி, தட்டையாக நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 3.94 புள்ளிகள் உயர்வடைந்து 65,220.03 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.90 புள்ளிகள் உயர்ந்து 19,396.50 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, என்டிபிசி, எம் அண்ட் எம், விப்ரோ, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.