Published : 30 Jul 2014 10:00 AM
Last Updated : 30 Jul 2014 10:00 AM
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 1 பில்லியன் டாலர் (6,013 கோடி ரூபாய்) அளவுக்கு புதிய முதலீடுகளைத் திரட்டி இருக்கிறது. ஆன்லைன் துறையில் திரட்டப்படும் அதிகபட்ச முதலீடு இதுவாகும். ஆனால் பங்குதாரர்களின் விகிதம் குறித்த விவரத்தை பிளிப்கார்ட் வெளியிடவில்லை.
இப்போது திரட்டப்பட்ட முதலீட்டையும் சேர்த்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடி ரூபாயாக (700 கோடி டாலர்) இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய முதலீட்டை ஏற்கெனவே முதலீடு செய்திருந்த நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன. டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட், நாஸ்பர், சிங்கப்பூர் சாவரின் வெல்த் பண்ட், ஜிஐசி, ஆக்செல் பார்ட்னர்ஸ், டிஎஸ்டி குளோபல், மார்கன் ஸ்டான்லி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ் மெண்ட் மற்றும் சொபினா ஆகிய நிறுவனங்கள் இப்போது முதலீடு செய்திருக்கின்றன.
திரட்டப்பட்ட தொகையை மொபைல் சேவைகள், ஆராய்ச்சி, மேம்பாடு, வாடிக்கையாளர் களுக்கு தரமான சேவை ஆகியவற்றுக்கு முதலீடு செய்யப்போவதாக பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது. மேலும் புதிய நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கும் தயாராக இருக்கிறது. புதிய நிறுவனங்கள் மூலம் டெக்னாலஜி உள்ளிட்ட பல விஷயங்கள் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.
பங்கு வெளியீடு (ஐபிஓ) குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சச்சின் பன்சாலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இப்போதைக்கு அதை பற்றி யோசிக்கவில்லை. சரியான பிஸினஸ் மாடல் கிடைக்கும் வரைக்கும் ஐபிஓ கிடையாது. மேலும் நிலையான பிஸினஸ் மாடல் மற்றும் இதற்கு மேல் புதிய விஷயங்கள் செய்ய முடியாது என்னும் பட்சத்தில் பங்கு வெளியீட்டில் ஈடுபட இருக்கிறோம்.
மேலும் எங்களது முதலீட்டா ளர்களும் இது குறித்து அவசரப் படவில்லை என்றார். 10 வருடங்கள் கூட ஆகலாம் என்று சூசகமாக தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 21 கோடி டாலரை பிளிப்கார்ட் திரட்டியது. கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இதுவரை 170 கோடி டாலரை (சுமார் 10,540 கோடி ரூபாய்) திரட்டி இருக்கிறது. கடந்த மே மாதம் மிந்த்ரா நிறுவனத்தை 2,000 கோடி ரூபாய்க்கு பிளிப்கார்ட் வாங்கியது. 2.2 கோடி பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளார்கள் இருக்கி றார்கள் மாதத்துக்கு 50 லட்சம் பொருட்களை பார்சல் செய்கிறது இந்த நிறுவனம்.
இப்போதைக்கு 24 கோடி இந்தியர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு இந்தியரையும் இணையம் மூலம் பொருள்களை வாங்க, விற்க தகுதியானவர்களாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார் பன்சால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT