தொடர்ந்து 3-வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தொடர்ந்து 3-வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும் போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.

நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ரெப்போ விகிதத்தை முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதி ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2.5 சதவீதம் உயர்த்தியது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் இவ்வாண்டு பிப்ரவரியில் 6.50 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “தற்சமயம் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திலேயே தொடர முடிவு செய்துள்ளோம். ஆனால், பணவீக்கத்தின் தீவிரம் இன்னும் குறையவில்லை. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டுவருவது அவசியம். பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், ரெப்போ விகிதத்தில்உரிய மாற்றம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

ஜிடிபி 6.5 சதவீதமாகவும் பணவீக்கம் 5.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பணவீக்கம் 6.2 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in