Published : 02 Nov 2017 08:54 AM
Last Updated : 02 Nov 2017 08:54 AM

டிரட்ஜிங் கார்ப்பரேஷன் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்: ரூ.1,400 கோடி திரட்ட திட்டம்

பொதுத்துறை நிறுவனமான டிரட்ஜிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள் கூறியபோது, டிரட்ஜிங் கார்ப்பரேஷனில் மத்திய அரசுக்கு சொந்தமான 73 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது என்று கூறினர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், டிரட்ஜிங் கார்ப்பரேஷனின் பங்கு விலக்கலுக்கு அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அதிகாரிகள் கூறியபோது, மத்திய அமைச்சரவை டிரட்ஜிங் கார்ப்பரேஷனில் அரசுக்கு சொந்தமான மொத்த பங்குகளான 73.47 சதவீத பங்குகளையும் விற்க அனுமதித்துள்ளது. இந்த பங்கு விலக்கல் மூலம் ரூ.1,400 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது என்றனர்.

மத்திய கப்பல் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் டிரட்ஜிங் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் பராமரிப்பு அகழ்வு, புதிய துறைமுக அகழ்வு, துறைமுக மேம்பாடு, நிலச் சீரமைப்பு, கழிமுக பகுதி அகழ்வு, திட்ட நிர்வாக ஆலோசனை, கப்பல் கட்டுமானம் போன்றவற்றிலும் ஈடுபடுகிறது. மத்திய அமைச்சரவை செயலர் தலைமையிலான பங்கு விலக்கல் துறை செயலகமும் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான நிதி ஆயோக் அமைப்பும் இந்த பங்கு விலக்கலுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இந்த பங்கு விலக்கல் நடவடிக்கையில் 73.47 சதவீத அரசின் பங்குகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது. தற்போதைய சந்தை விலையில் பங்கு விற்பனை இருக்கும். இதன் மூலம் ரூ.1,400 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பங்கு வர்த்தகத்தில் டிரட்ஜிங் கார்ப்பரேஷன் பங்குகள் 20 சதவீத ஏற்றத்தைக் கண்டு ரூ.669.95 விலையில் நிலை கொண்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x