Published : 02 Nov 2017 08:57 AM
Last Updated : 02 Nov 2017 08:57 AM

மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டன. தொழில் புரிவதற்கான சாதகமான சூழல் இருக்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா முதல் முறையாக 100-வது இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன.

நேற்று வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்து 33600 புள்ளியில் முடிவடைந்தது.

இதற்கு முன்பாக 33266 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்ததே அதிகபட்சமாகும். அதேபோல நிப்டியும் 105 புள்ளிகள் உயர்ந்து 10440 புள்ளியில் முடிவடைந்தது. இதற்கு முன்பாக நிப்டி 10384 புள்ளிகளில் நிறைவடைந்ததே அதிகபட்சமாகும்.

துறைவாரியாக பார்க்கும் போது ரியால்டி குறியீடு அதிகபட்சமாக 2.93 சதவீதம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து வங்கி, உலோகம், எப்எம்சிஜி உள்ளிட்ட குறியீடுகள் அதிகபட்சமாக உயர்ந்தன. மாறாக கன்ஸ்யூமர் டியுரபிள், ஆட்டோ மற்றும் ஹெல்த்கேர் மற்றும் மின்சார குறியீடுகள் சரிந்து முடிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் பார்தி ஏர்டெல் (8.19%), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (4.58%), ஐசிஐசிஐ வங்கி (4.42%), ஹெச்டிஎப்சி (2.58%) மற்றும் ஆக்ஸிஸ் வங்கி (2.05%) ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தன. மாறாக டாக்டர் ரெட்டீ’ஸ் (-2.9%), ஹீரோமோட்டோ கார்ப் (-0.99%) சன்பார்மா (-0.89%) மற்றும் பஜாஜ் ஆட்டோ (-0.60) ஆகிய பங்குகள் அதிகம் சரிந்து முடிந்தன.

ஏர்டெல் 8% உயர்வு

தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக நிறுவனத்தின் செயல்பாடுகள் மோசமாக இருந்தாலும் ஏர்டெல் நிறுவன பங்கு நேற்று அதிகபட்சமாக 9.41 சதவீதம் உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 8 சதவீதம் உயர்ந்து முடிந்திருக்கிறது. இதனால் ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.16,290 கோடி உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.15 லட்சம் கோடியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x