Last Updated : 06 Jul, 2014 03:41 PM

 

Published : 06 Jul 2014 03:41 PM
Last Updated : 06 Jul 2014 03:41 PM

பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போதுதான் விரிவாக்கம் செய்ய வேண்டும்: வி.கதிரேசன் நேர்காணல்

‘வொயிட் குட்ஸ்’ எனும் வீட்டு உபயோகப் பொருட்களுக் கான சந்தை பெரியது. இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த வொயிட் குட்ஸ்களுக்கான சந்தை பெரியது. அந்தச் சந்தையைக் கையகப்படுத்தும் வகையில் இப்போது விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் வி.கதிரேசனை சந்தித்தோம். அந்த உரையாடலிலிருந்து..

உங்களுடைய ஆரம்ப காலம் குறித்து?

வீனஸ் எலெக்ட்ரிக்கல் ஸ்டோர் என்று அப்பா ஆரம்பித்தார். அதன் பிறகு கன்ஸ்யூமர் டியூரபிள் ரீடெய்ல் நிறுவனம் ஆரம்பித்தோம். 2003-ம் ஆண்டு வரைக்கும் திண்டுக்கல்லில் மட்டும் இருந்தது. அதன் பிறகு விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டோம். இது தவிர இன்னும் சில தொழில்களும் இருக்கின்றன.

2003-ம் ஆண்டு நீங்கள் விரிவாக்க பணிகளை ஆரம்பித்தபோது அப்போதே பல நிறுவனங்கள் இருந்தன. எந்த நம்பிக்கையில் ஆரம்பித்தீர்கள்?

நிறைய நிறுவனங்கள் இருந்தாலும் இதற்கான தேவை இன்னும் இருக்கிறது. மேலும் இது வால்யூம் அடிப்படையாக நடக்கும் வியாபாரம். ஒரே இடத்தில் இருக்கும்போது உங்களால் வால்யூம் அதிக அளவில் செய்ய முடியாது. அதனால் அடுத்த கட்ட இடங்களை நோக்கி செல்கிறோம். இந்த வருடம் கூட இன்னும் 10 இடங்களில் புதிய ஷோ ரூம்களைத் திறக்க இருக்கிறோம்.

ஒரு ஷோ ரூம் அமைக்க எவ்வளவு செலவாகும்?

சிறிய ஊர்களில் அமைப்பதென்றால் 30 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் அமைப்பதென்றால் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரைக்கும் செலவாகும்.

முதலீட்டை திரும்பி எடுக்க எவ்வளவு காலம் ஆகும்?

3 முதல் 5 வருடங்கள் ஆகும்.

இப்போது வருகிற வாடிக்கையாளர்கள் ஓரளவுக்கு தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறார்கள். இது உங்களுக்கு சாதகமா இல்லை பாதகமா?

இரண்டுமே இருக்கிறது. சில வாடிக்கையாளர்களிடம் ஒருமுறை விளக்கினாலே அவர்களுக்குப் புரிந்துவிடும். எளிதில் விற்க முடியும். சில வாடிக்கையாளர்கள் ஓரளவு மட்டும் தெரிந்துகொண்டு அவர்கள் சொல்லியதையே சொல்லுவார்கள். அந்த வாடிக்கையாளர்களை சமாளிப்பது கஷ்டம்.

தங்கம் விற்கும் கடைகளில் கூட ஒரு பொருள் எவ்வளவு என்பதை வாடிக்கையாளர்களுக்கு டிஸ்பிளேவில் தெரிவிக்கிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கும் கடைகளில் விலைகளை உங்களிடம் கேட்டுத்தானே தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது? ஒவ்வொரு கடையில் ஒரு விலை, இது ஏன்?

எம்.ஆர்.பி.யில் யாரும் விற்பது கிடையாது. எம்.ஆர்.பி.யில் யாரும் வாங்குவதும் கிடையாது. மேலும் இட்லி விலையை கேட்டு வாங்கி விடுகிறீர்கள், தங்கத்தின் விலையைக் கேட்டு வாங்குகிறீர்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்களில் 60% பேரம் பேசுகிறார்கள். ஒரு வேளை விலையை காண்பித்தால் இதை விட மிக குறைந்த விலையில் மற்ற நிறுவனங்கள் வைத்து விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆன்லைன், சோசியல் மீடியாவை பயன்படுத்துகிறீர்களா?

ஃபேஸ்புக் மூலம் மார்க்கெட் செய்து வருகிறோம். மேலும் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளங்களுடன் இணைந்திருக்கிறோம். விரைவில் நாங்களே இணையதளம் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த துறை சந்திக்கும் சவால்கள் என்ன?

தகுதி வாய்ந்த ஆட்கள் கிடைப்பதுதான் மிகப்பெரிய பற்றாக்குறை. மேலும் வேலை மாறுபவர்களின் விகிதமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது பரவாயில்லை என்ற நிலைமையில் இருந்தாலும் வேலை மாறுபவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. இத்தனைக்கும் நிறுவனத்தின் ஊழியராகக் கருதி பி.எஃப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்டவை கொடுத்தாலும், இந்த பிடித்தம் தேவை இல்லை. மொத்தமாக கொடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள்.

இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது.?

முந்தைய ஆண்டுகளில் சில கடைகளில் மிதமான வளர்ச்சி இருந்தது. சில கடைகளில் நெகட்டிவ் வளர்ச்சி கூட இருந்தது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது வளர்ச்சி இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு சிறப்பாக இருந்தது. இந்த வளர்ச்சி அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும்

வளர்ச்சியை கணித்ததால்தான் விரிவாக்க பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

பிஸினஸ் எப்போது மந்தமாக இருக்கிறதோ அப்போதுதான் விரிவாக்கம் செய்ய வேண்டும். அது கடினம்தான். ஆனாலும் செய்ய வேண்டும். கடந்த சில வருடங்களாகவே விரிவாக்கப்பணிகளில் ஈடுபட்டோம். அதனை இப்போது தொடர்கிறோம்.

உங்களுக்கு நிறைய ஷோ ரூம்கள் இருக்கிறது. நீங்களே சொந்தமாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் ஏன் ஈடுபடக்கூடாது?

சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தோம். லாபமும் கிடைத்தது. ஆனால் டெக்னாலஜி, சர்வீஸ் உள்ளிட்ட சில விஷயங்களால் தொடர முடியவில்லை. எங்களுடைய சொந்த பொருட்கள் தயாரிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம்.

ஷோ ரூம்கள் உங்களுடையதா, இல்லை பிரான்ஸைசியா?

மொத்தமும் எங்களுடையதுதான். பிரான்ஸைசி குறித்து யோசித்து வருகிறோம். இதற்கு முன்பு சில நிறுவனங்கள் ஆரம்பித்தார்கள். ஆனால் வெற்றி அடைய முடியவில்லை. அதிலிருக்கும் பிரச்சினைகளை களைந்து பிரான்ஸைசி குறித்து யோசித்து வருகிறோம்.

எத்தனை சதவீத மக்கள் இ.எம்.ஐ.யில் பொருட்கள் வாங்குகிறார்கள்?

40 சதவிதம் மக்கள் இ.எம்.ஐ.யில் வாங்குகிறார்கள். 30 சதவீதம் ரொக்கமாகவும், 30 சதவீதம் டெபிட்/கிரெட் கார்ட் மூலமாக வாங்குகிறார்கள். இது சென்னையில்.

ஒரு பொருள் எத்தனை நாள் உங்களது ஷோ ரூமில் இருக்கிறது.?

கடைக்கு கொண்டு வரும் பொருள் சராசரியாக 30 நாட்களுக்குள் விற்றுவிடும். 30 நாட்களுக்கு மேல் கடையில் இருக்கும் பொருட்கள் ஐந்து சதவீத அளவுக்கு மட்டுமே இருக்கும்.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

உங்களுக்கு என்ன தேவை, எவ்வளவு பட்ஜெட் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து வந்தால் உங்களுக்கு தேவையானது எளிதில் கிடைக்கும். நீங்கள் ஏ.சி. வாங்க வருகிறீர்கள் என்றால், உங்கள் அறையின் அளவு எவ்வளவு என்பதை தோராயமாக தெரிந்துவாருங்கள். பெரிய அறை இருக்கும், ஆனால் ஒரு டன் ஏ.சி. போதும் என்று சொல்லிவிட்டு போதுமான குளிர் இல்லை என்று நீங்களே சொல்லுவீர்கள்.

அதேபோல டி.வி. வாங்க வேண்டும் என்றாலும் உங்களது ஹால் நீளம் தெரிய வேண்டும். சிலர் சிறிய ஹாலை வைத்துக்கொண்டு 50 இன்ச் டி.வி. கேட்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x