Published : 04 Nov 2017 09:55 AM
Last Updated : 04 Nov 2017 09:55 AM
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) திட்டத்தில் சேர அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று கூறிய இபிஎப்ஓ ஆணையர் வி பி ஜாய், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அந்த நாடுகளில் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இருந்து விலகி உள்ளனர். அவர்களுக்கு இந்தியாவின் வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் சேர வாய்ப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
புதிய முயற்சிகளில் மோசடிகளை எதிர்கொள்வது குறித்து நடந்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜாய் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலமாக சேரலாம். தற்போது இது நடைமுறையில் உள்ளது என்றும் கூறினார். வெளிநாடுகளின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தவில்லை. இந்த திட்டத்தில் சேர்வது இந்திய பணியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாகத்தான் இருக்கும். அவர்கள் இரண்டு நாடுகளிலும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பங்களிப்பு செய்வதிலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கொண்டுவரப்படுகிறது என்றார்.
இபிஎப்ஓ ஆணையம் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதி கணக்குகளை கையாண்டு வருகிறது. வெளிநாடுகளில் இவற்றை செயல்படுத்த 18 நாடுகளில் இபிஎப்ஓ ஆணையம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
மொத்த நடவடிக்கைகளும் தொழிலாளர்கள் நலன் சார்ந்ததாக இருக்கும். தொழிலாளர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கையில் சிஓசி (certificate of coverage (CoC) சான்றிதழ் வாங்க வேண்டும். இந்த சான்றிதழுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவே பெறவும் செய்யலாம். இதற்கான ஒரு பக்க அளவிலான விண்ணப்பம் இபிஎப்ஓ இணைய தளத்திலேயே உள்ளது என்றும் ஜாய் கூறினார்.
இந்த திட்டம் உலகம் முழுவ தும் பணிக்குச் செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு உதவும். சிஓசி சான்றிதழ் வாங்குவது அவர்களுக்கு மிகப் பெரிய பயனை அளிக்கும். இதன் மூலம் அவர்களது பணம் பணிக்குச் செல்லும் நாடுகளில் நீண்ட காலத்துக்கு முடங்கி இருக்காது என்றார்.
இந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், கொரிய குடியரசு, நெதர்லாந்து, ஹங்கேரி, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரியா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT