Published : 07 Nov 2017 09:59 AM
Last Updated : 07 Nov 2017 09:59 AM
பொருளாதார நுண்ணறிவோடு அணுகினால் மட்டுமே தொழில்துறையில் வளர்ச்சியை எட்டமுடியும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.
சென்னையில் தமிழக அரசுடன் இணைந்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (தமிழ்நாடு கவுன்சில்) `கனெக்ட் 2017’ என்ற கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், நிறுவனங்கள் துறை அமைச்சர் எம். சி. சம்பத், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், நிறுவனங்கள் துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்தரங்கு மலரை வெளியிட்டு அமைச்சர் எம்.மணிகண்டன் பேசியதாவது: பொருளாதார நுண்ணறிவோடு அணுகினால் மட்டுமே தொழில்துறையில் வளர்ச்சியை எட்டமுடியும். மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகள் மிக தேவையாக இருக்கின்றன. தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றன. சர்வதேச பொருளாதாரத்தையும் மற்றும் தொழில்களையும் தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளை செய்து வருகின்றது. குறிப்பாக சாமானிய மக்களுக்கு இந்த சேவைகள் சென்றடையும் வகையில் தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அரசு இ-சேவை மையம், தமிழ் விர்ச்சுவல் அகாடமி, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன. இதனால் தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த கருத்தரங்கு மூலம் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை மேம்பாடு அடையும் என நம்புகிறேன் என்று அமைச்சர் எம். மணிகண்டன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT