

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 164 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்வடைந்து 65,558 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயர்ந்து 19,413 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் போது அது புதிய உச்சத்தை அடைந்தது. காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 636.93 புள்ளிகள் உயர்வடைந்து 66,030.83 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 164.45 புள்ளிகள் உயர்ந்து 19,548.75 ஆக இருந்தது.
அமெரிக்க சில்லறை பணவீக்க தரவுகளின் வீழ்ச்சி உலகளாவிய சந்தைகளின் உணர்வினைத் தூண்டியது. அதன் சாதகமான போக்குகளுக்கு மத்தியில், ஐடி பங்குகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் எழுச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சம் தொட்டன. வர்த்தகத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 66,064 ஆகவும், நிஃப்டி 19,567 ஆகவும் உயர்ந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 164.99 புள்ளிகள் உயர்வடைந்து 65,558.89 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29.45 புள்ளிகள் உயர்ந்து 19,413.75 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டிசிஎஸ், இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்க் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.