Published : 27 Jun 2023 01:18 PM
Last Updated : 27 Jun 2023 01:18 PM

அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு ஜூலை 11 வரை நீட்டிப்பு: EPFO அறிவிப்பு

மும்பை: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தக் கெடு இன்று (ஜூன் 26) உடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் அவகாசம் பெறுகின்றனர். இந்தக் காலக்கடத்தைப் பயன்படுத்தி, பணியாளர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய பிராந்திய அலுவலகத்தில் பத்தி 11(3) மற்றும் 11(4) ஆகியவற்றின் கீழ் கூட்டு விருப்பத்தினை சமர்ப்பிக்கலாம். அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஏற்கெனவே மே 3 ஆம் தேதியுடன் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அது ஜூன் 26 ஆக நீட்டிக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக நீட்டிக்கப்பட்டு ஜூலை 11 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் பிரதிநிதிகள் மத்திய அரசிடம் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரியதன் அடிப்படையில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (ஜூன் 26, 2023) வரை நாடு முழுவதுமிருந்து அதிக ஓய்வூதியம் கோரி 16 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள், ஊழியர்கள் என சுமார் 1000 பேருக்கு இபிஎஃப்ஓ சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய பென்சன்தாரர்கள் அல்லது ஊழியர்கள் கேஒய்சி தகவல்களை சேர்ப்பதில் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் EPFiGMS மூலம் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கான ஊதிய விவரங்களை தெரிவிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இபிஎஃப்ஓ-வின் தொழில்நிறுவனங்கள் தரப்பு பிரதிநிதி கே.இ.ரகுநாதன் கூறுகையில், "தொழில் நிறுவனங்களுக்கு 3 மாத கால அவகாசமும், தொழிலாளர்களுக்கு 15 நாள் அவகாசமும் வழங்கி இபிஎஃப்ஓ தனது நேயத்தை நிரூபித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x