Published : 02 Jul 2014 08:14 AM
Last Updated : 02 Jul 2014 08:14 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 3 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு!

போரூர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட 28 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தில் 72 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் கடந்த 4 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை இரவு வரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 4-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீட்புப் பணி நடந்தது. மீட்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் உள்ள இடைவெளி வழியாக சிறிய அளவிலான நவீன கேமராவை செலுத்தி உள்ளே யாராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்காணித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கேமரா மூலம் பார்த்தபோது சிலர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மீட்புக் குழுவினர் பணிகளை தீவிரப்படுத்தினர். கட்டிட இடிபாடுகளை வெட்டி எடுத்தனர். காலை 5.30 மணி அளவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் (20) என்பவரை உயிருடன் மீட்டனர். 7.15 மணி அளவில் ஆந்திராவைச் சேர்ந்த மொம்மி என்ற அனுசூர்யா (35), மதுரையை சேர்ந்த செந்தில் (30) ஆகியோரையும் பத்திரமாக மீட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மதியம் 12 மணியளவில் கட்டிடத்தின் பின்புறத்திலும் தேடுதல் பணியை துரிதப்படுத்தினர். அப்போது 4-வது தளம் சரிந்து விழுந்த பகுதியில் ஒருவர் இந்தியில் குரல் கொடுப்பது உணரப்பட்டது. அங்கிருந்த கான்கிரீட் துண்டுகளை ட்ரில்லர் கருவி மூலம் சிறிது சிறிதாக வெட்டி எடுத்தனர். நாலரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மாலை 5.20 மணியளவில் அவரை உயிருடன் மீட்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டவர் ஒடிசாவைச் சேர்ந்த விகாஸ்குமார் என்று தெரிந்தது.

கட்டிடம் இடிந்து 3 நாட்களுக்குப் பிறகு உள்ளே சிக்கியிருந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டது பெரிய ஆச்சரியம் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காலை 11 மணி அளவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெயம்மா (55) என்பவரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவர் இறந்தார். செவ்வாயக்கிழமையும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டன.

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட 28 பேரில் 27 பேர் போரூர் ராமச்சந்திர மருத்துவமனையிலும், ஒரு பெண் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x