

சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையம் ஜூலை மாதத்தில் இருந்து முழுமையாக செயல்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் சோதனை முறையில் ஏப்ரல் 25-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.
அன்றைய தினம் சோதனை நடவடிக்கையாக வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை - டாக்கா இடையே ‘யுஎஸ் பங்ளா’ என்ற பயணிகள் விமானம் இயக்கப்பட்டது. தொடர்ந்து சிறிய வகை விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில் நடுத்தர விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்படஉள்ளன.
ஜூன் மாதம் முழுவதும் சோதனை முறையில் விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் புதிய விமான முனையம் முழுமையாக செயல்படத் தொடங்கஉள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.30 கோடி பயணிகள் பயணம்செய்கின்றனர். புதிய முனையம் திறப்பால் பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.