Published : 30 Oct 2017 10:03 AM
Last Updated : 30 Oct 2017 10:03 AM

பொதுத்துறை வங்கிகளில் மூலதன உயர்வு: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்பங்கேற்கும் என தகவல்

பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமும் (எல்ஐசி) பங்கேற்கும் என தெரிகிறது. ஏற்கெனவே பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் எல்ஐசி கணிசமான பங்குகளை வைத்திருக்கிறது. தற்போது முதலீடு செய்வதன் மூலம் மேலும் பங்குகளை உயர்த்த எல்ஐசி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

பொதுத்துறை வங்கிகள் எப்படி நிதி திரட்டிக்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட பல வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகிறது. சிறந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நிதி திரட்டுவோம் என சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதற்கு முன்பாக எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளில் பலமுறை முதலீடு செய்திருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிதி திரட்டுவதின் ஒரு பகுதியாக பேங்க் ஆப் இந்தியா முன்னுரிமை பங்குகளை வெளியிட்டது. இதில் எல்ஐசி கலந்துகொண்டு ரூ.451 கோடியை முதலீடு செய்தது.

அதேபோல கடந்த சில ஆண்டுகளில் யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தங்களது மூலதனத்தை உயர்த்திக்கொள்ள முன்னுரிமை பங்குகளை வெளியிட்டன. இதிலும் எல்ஐசி பங்கேற்றது. சமீபத்தில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ரூ.15,000 கோடி அளவுக்கு நிதி திரட்டியது. இதில் ரூ.5,800 கோடி அளவுக்கு எல்ஐசி முதலீடு செய்தது.

பொதுத்துறை வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்தால் அது காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) விதிமுறை களுக்கு ஏற்பவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடன் வளர்ச்சி விகிதம் உயரும்: அம்பிட்

வங்கிகளின் மூலதனத்தை உயர்த்த இருப்பதால் கடன் வளர்ச்சி விகிதம் உயரும் என அம்பிட் நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது: தற்போது வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கிறது. மூலதனத்தை அதிகரித்த பிறகு, அடுத்த நிதி ஆண்டில் (2018-19) வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது. கடன் வளர்ச்சி உயர இருப்பதால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியும் உயரும். நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும். ஆனால் அடுத்த நிதி ஆண்டில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும் என அம்பிட் கருத்து தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x