

புதுடெல்லி: காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) உச்சவரம்பு 74% ஆக உள்ளது. இதை 100% ஆக உயர்த்த வகை செய்யும் ‘சப்கா பீமா சப்கா ரக்ஷா மசோதா, 2025’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து இது சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.
இதன்படி, காப்பீட்டுத் துறையில் தானியங்கி முறையில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. எனினும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி முகமையின் (ஐஆர்டிஏI) ஒப்புதல் மற்றும் சரிபார்ப்புக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முழு உரிமையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியக் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டுப் பங்கேற்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஒரு தனி விதியைப் பின்பற்றும். அதன்படி, எல்ஐசி-யில் வெளிநாட்டு முதலீடு தானியங்கி முறையில் 20% ஆக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.