புதுச்சேரியில் கரோனாவிலிருந்து மீண்டுவந்த ஓய்வுபெற்ற அதிகாரி: பேண்ட் வாத்தியங்களுடன் வரவேற்ற குடும்பத்தினர்

புதுச்சேரியில் கரோனாவிலிருந்து மீண்டுவந்த ஓய்வுபெற்ற அதிகாரி: பேண்ட் வாத்தியங்களுடன் வரவேற்ற குடும்பத்தினர்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஓய்வுபெற்ற அதிகாரிக்கு அவரது குடும்பத்தினர் பேண்ட் வாத்தியத்துடன் வரவேற்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரி. சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 76 வயதான இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து நேற்று காரில் தனது வீடு திரும்ப புறப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். ஜிப்மரில் சிகிச்சை முடித்தவுடன் ராஜேந்திரனை காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். காரின் முன்னே பேண்ட் வாத்தியமும் இசைக்கப்பட்டது. பின்னர் அவரது வீடு இருக்கும் ரெயின்போ நகரை வந்தடைந்தவுடன் பாடல்கள் இசைக்க ஊர்வலமாக வந்தார். மேலும் அவரை வரவேற்று "கரோனாவை புறமுதுகு காட்டி ஓடச்செய்து இல்லம் திரும்பி நூற்றாண்டு வாழ வாழ்த்துகள்" என பேனரும் வைத்திருந்தனர். வீட்டுக்கு வந்தவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பூங்கொத்து தந்து சால்வை அணிவித்து வரவேற்றுள்ளனர்.

கரோனாவால் சிகிச்சைக்கு பெற்று குணமடைந்து வீடு திரும்பியதற்கு வித்தியாசமான முறையில் குடும்பத்தினர் வரவேற்பு அளித்ததை அறிந்த பொதுமக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in