கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: கூட்டுறவு சங்கங்களுக்கான தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ஏ.ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பிரகலாதன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''ஏ.ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்த என்னை சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்தனர். கூட்டுறவு சங்க விதிகளின்படி கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுக்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். இந்தப் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் கூட்டுறவு சங்கங்களின் பணிகள் பாதிக்கப்படும். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கும் அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களைக் கலைக்கவோ, நிர்வாகக் குழுவை நீக்கவோ கூடாது என உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சட்டத்திருத்த மசோதா மட்டும்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மசோதா நிலையில் வழக்குத் தொடர முடியாது, மசோதா சட்டமாகும்போதுதான் அதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய முடியும், மனுதாரர் முன்கூட்டியே நிவாரணம் கேட்டு நீதிமன்றம் வந்துள்ளார் எனக் கூறி, பிரகலாதனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in