Published : 21 Jan 2022 11:11 AM
Last Updated : 21 Jan 2022 11:11 AM

யானைப் பசியின் சோளப்பொறிக்கு ஒப்பானது மழை பாதிப்பின் நிவாரணம்; உயர்த்தி வழங்குக: அன்புமணி ராமதாஸ்

சென்னை : மழை,வெள்ள பாதிப்புகளுக்கான அரசின் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறியாகும், உடனடியாக நிவாரணத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

"தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்களுக்கு வெறும் ரூ.168.35 கோடி இழப்பீடு மட்டும் 3,16,837 விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கான இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானது அல்ல!

4,44,988 ஏக்கருக்கு ரூ.168.35 கோடி என்றால் ஓர் ஏக்கருக்கு 3783 ரூபாயும், ஓர் உழவர்க்கும் 5,313 ரூபாயும் மட்டும் தான் இழப்பீடாக கிடைக்கும். இதுவரை வழங்கப்பட்ட ரூ. 97.92 கோடி இழப்பீட்டில் 2,23,788 உழவர்களுக்கு சராசரியாக ரூ.4375 மட்டுமே கிடைத்திருக்கிறது!

பல்லாயிரக்கணக்கில் முதலீடு செய்து, மாதக்கணக்கில் சாகுபடி செய்த உழவர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.3,783, தனி மனிதருக்கு ரூ.4,375 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம்? ரூ.3,783 இழப்பீடு உழவர்களின் துயரத்தை எந்த வகையில் போக்கும்? இதுவா உழவர் நலன் காக்கும் நடவடிக்கை?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டால் தான் அவர்கள் கடன் சுமையிலிருந்து மீள்வார்கள். அதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x