பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.7 கோடி சாதனை ஊக்கத் தொகை: போக்குவரத்துறை அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7 கோடியே 1 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று போக்குவரத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத்தொகை” வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 1 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்."

இவ்வாறு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in