Published : 05 Jan 2022 01:43 PM
Last Updated : 05 Jan 2022 01:43 PM

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கோப்புப் படம்

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதியுதவியை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த இரண்டு அறைகள் இடிந்து விழுந்தன.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதில் "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x