Published : 30 Dec 2021 05:33 PM
Last Updated : 30 Dec 2021 05:33 PM

நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக துரோகம்: விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி 5 சவரன் நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்துக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டுறவுத் துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைக் கடன்களில் 14.5 லட்சம் நகைக் கடன்கள் மட்டுமே ஏற்புடையது எனத் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், வெற்றி பெற்ற பிறகு அதனைக் கிடப்பில் போடுவதும்தான் இன்றைய ஆட்சியாளர்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.

நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. நம்பி வாக்களித்த மக்களை ஆளும் திமுக அரசு ஏமாற்றாமல் 5 சவரன் வரை அடமானம் வைத்த நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x