Published : 27 Dec 2021 01:39 PM
Last Updated : 27 Dec 2021 01:39 PM

30 நாள் பரோலில் நளினி விடுவிப்பு

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி 30 நாள் பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான முருகன், நளினி உள்பட 7 பேர் 30 ஆண்டுகளாக ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்று சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்தார்.

அதில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நளினிக்கு பரோல் வழங்குமாறு தாயார் பத்மா கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் பத்மாவின் கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இன்று வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினி, அரசின் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். காவல்துறையினரின் பாதுகாப்புடன் இன்று காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள தாயாரின் வாடகை வீட்டிற்கு நளினி செல்லவுள்ளார். அங்கேயே தங்கி தனது தாய் பத்மாவின் உடல் நிலையை நளினி கவனிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x