Published : 27 Dec 2021 01:02 PM
Last Updated : 27 Dec 2021 01:02 PM

20 ஆண்டுகளைத் தாண்டிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை ஆய்வு செய்க: டிடிவி தினகரன்

சென்னை: 20 ஆண்டுகளைத் தாண்டிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அனைத்தையும் தமிழக அரசு முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதைப் பார்த்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் பெரும்பாலோனார் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்கிடையே யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடுதல் பணியில் அப்பகுதி மக்களின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விபத்து குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

"சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென நொறுங்கி விழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அங்கு குடியிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது.

இடிந்து விழுந்த அடிக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர்களுக்கு உடனடியாக மாற்று இடங்களைத் தமிழக அரசு வழங்குவதுடன் அதே வளாகத்திலுள்ள எஞ்சிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலைத்தன்மையையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

இதுமட்டுமின்றி, 20 ஆண்டுகளைத் தாண்டிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, அவை மக்கள் வசிக்க ஏற்றவையா? என உறுதி செய்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது."

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x