Last Updated : 23 Dec, 2021 04:56 PM

 

Published : 23 Dec 2021 04:56 PM
Last Updated : 23 Dec 2021 04:56 PM

யூடியூபர் மாரிதாஸ் மீதான மேலப்பாளையம் வழக்கு ரத்து: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை: யூடியூபர் மாரிதாஸ் மீதான மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ். முப்படைத் தளபதி பிவின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக இவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

முன்னதாக, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரிலும், கரோனா முதல் அலை பரவலின் போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

இதில், மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு விசாரணையும் கேட்ட நீதிபதி, யூடியூபர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x