Published : 21 Dec 2021 05:01 PM
Last Updated : 21 Dec 2021 05:01 PM

தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்க: வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'கடந்த 19.12.2021 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்படம் பகுதிகளைச் சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளை மீட்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்குள் மீண்டும் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலாட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள், தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதை தடுத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி, பாக் ஜலசந்தியில் மீன்பிடிப்பதற்கான நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதும், மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பதும் நமது கடமையாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையிடமிருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவுத் துறை அமைச்சரை இன்று நேரில் சந்தித்து தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தி கடிதத்தினை வழங்கினர்’ என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x