

சென்னை: மத்திய அரசுக்குக் கொத்தடிமையாக இருக்கிறோம் என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவிற்கு வழக்கமாக இருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாகப் பேசிவிட்டு பதவிக்கு வந்த பிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது.
இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு கருணாநிதி செய்ததை இப்போது ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார்.
அரசாங்கத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசியபோது ஸ்டாலினுக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயலலாமா?
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது."
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்