Published : 15 Dec 2021 11:44 AM
Last Updated : 15 Dec 2021 11:44 AM

ஒமைக்ரான் பரவல்; பாதுகாப்பைத் தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவல் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

"அனைத்து மாவட்டங்களிலும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தற்போது வரை 22 நாடுகளுக்குப் பரவியுள்ளது. ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது இல்லை என்பது வேதனை அளிக்கிறது. கரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்."

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x