

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் விருப்ப மனுக்களைக் கட்சி அலுவலத்தில் வழங்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு;
"நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 1.12.2021-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தலில் போட்டியிட விரும்புகிற பொதுப் பிரிவினர் ரூ.1,000, பட்டியலினத்தவர்கள் மற்றும் மகளிர் ரூ.500 என்கிற கட்டணத்தைச் செலுத்தி விருப்ப மனுக்களை வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அன்றைய தேதியில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்வார்கள்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.