

வருகின்ற 24, 25ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழக கடலோரப் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
மேலும் 24, 25ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். தெற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்யும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.