ஜல்லிக்கட்டு காளையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: மலர் தூவி கிராம மக்கள் அஞ்சலி

ஜல்லிக்கட்டு காளையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: மலர் தூவி கிராம மக்கள் அஞ்சலி
Updated on
1 min read

ஓசூர் அருகே கடந்த ஆண்டு உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளையின் முதலாம் ஆண்டு நினைவாக பூனப்பள்ளி கிராமத்தில் உள்ள அதன் கல்லறைக்கு கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள பூனப்பள்ளி கிராமத்தில் பிஎம்சி கரியா என்கிற பெயரில் ஜல்லிக்கட்டு காளை மாடு வளர்க்கப்பட்டு வந்தது. இந்தக் காளை தான் கலந்துகொண்ட எருது விடும் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று இப்பகுதி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்தது.

பூனப்பள்ளி கிராமத்தில் கன்றுக்குட்டியில் இருந்தே வளர்ந்து வந்த இந்தக் காளை மாடு, கிராமத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறி, கிராம மக்களால் பாசத்துடன் வளர்க்கப்பட்டு வந்தது. இந்தக் காளை மாடு, மாநில அளவில் பல மாவட்டங்களில் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட எருது விடும் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளையும், பரிசுகளையும் வாங்கிக் குவித்தது.

பூனப்பள்ளி கிராமத்துக்கே பெருமை தேடித்தந்த பிஎம்சி கரியா காளை மாடு கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு நவம்பர் 18-ம் தேதி அன்று உயிரிழந்தது. அப்போது கிராம மக்கள் ஒன்றுகூடி, தாங்கள் பாசத்துடன் வளர்த்து வந்த காளை மாட்டை டிராக்டரில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கிராமத்துக்கு அருகே அடக்கம் செய்தனர்.

அந்தக் காளை மாட்டின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு காளை மாடு அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மலர்களால் அலங்கரித்த கிராம மக்கள், அப்பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in