

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதுமேலும் மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் 17ஆம் தேதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதன் காரணமாகவும், ஏற்கெனவே உள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால் இன்று தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.