Published : 12 Nov 2021 05:13 PM
Last Updated : 12 Nov 2021 05:13 PM

சென்னை வெள்ள நிவாரண நடவடிக்கை: 5 குழுக்களை அனுப்பிய கடலோரக் காவல் படை

சென்னை வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக ஐந்து வெள்ள நிவாரணக் குழுக்கள் இந்திய கடலோரக் காவல் படையால் அனுப்பப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் சென்னையில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ஐந்து வெள்ள நிவாரணக் குழுக்களை இந்திய கடலோரக் காவல்படை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புப் பிரிவு தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சமீபத்தில் பெய்த கனமழையின்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செயலூக்கமான உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடலோரக் காவல் படை சென்னையில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க ஐந்து வெள்ள நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது.

முன்னதாக இக்குழு ICG மீன்வளத் துறையுடன் ஒருங்கிணைந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதற்குள் கடலில் இயங்கிவரும் தமிழகத்தின் அனைத்து மீன்பிடிப் படகுகளும் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்தது. இதனால் கடலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x