

ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகக் குழு கூட்டத்தில், புதிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்ட எல்லையில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இந்த நகரின் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தலைவர் பதவிக் காலம் கடந்த ஆண்டு நவம்பருடன் முடிவடைந்தது.
புதிய தலைவராகத் தமிழக ஆளுநர் ரவி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகக் குழு உறுப்பினர்களாகப் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டனர். ஆளுநரும், ஆரோவில் தலைவருமான ரவி தலைமையில் இன்று ஆரோவில்லின் முதல் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் காலை தொடங்கி மதியம் வரை நடந்தது. இக்கூட்டம் தொடர்பாக விசாரித்தபோது, "ஆரோவில் வளர்ச்சிப் பணிகள், புதிய திட்டங்கள், பாதுகாப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டனர்.
முன்னதாக தமிழக, புதுவை ஆளுநர்கள் ஆரோவில் அமைதி மையத்தைப் பார்வையிட்டனர். இரு மாநில ஆளுநர்கள் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது.
.