

எல்லைப் போராட்டத் தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எல்லைப் போராட்டத் தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் நாள் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகிகளைத் தமிழ்நாடு அரசு போற்றி, சிறப்பித்து வருகிறது. தற்போது எல்லைக் காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.5500-ம், மருத்துவப் படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.3000-ம், மருத்துவப் படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு, சிறை சென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.