Published : 27 Oct 2021 12:36 PM
Last Updated : 27 Oct 2021 12:36 PM

சசிகலா விவகாரம்; ஓபிஎஸ் கருத்து சரியே: டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்து சரியானது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி மிஷன் தெருவில் மருது சகோதரர்கள் குரு பூஜை விழாவையொட்டி, அவர்களது படத்துக்கு இன்று (அக்டோபர் 27-ம் தேதி) காலை மாலை அணிவித்தார் தினகரன். அப்போது அமமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறும்போது, ''மருது சகோதரர்கள் வீரத்துக்கும் விசுவாசத்துக்கும் சிறந்தவர்கள். அவர்களைப் போன்ற நல்ல மனிதர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவருவதே எங்களது இலக்கு.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்துக் கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான். அவர் எப்போதுமே நிதானமாகத்தான் பேசுவார். அவர் தனது மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் அவரின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x