Last Updated : 05 Oct, 2021 07:10 PM

 

Published : 05 Oct 2021 07:10 PM
Last Updated : 05 Oct 2021 07:10 PM

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் கொள்ளை: ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறதா? என்பது தொடர்பாகத் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகர நத்தத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’தாமிரபரணி ஆற்றிலிருந்து பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம் குறிச்சி வரை முறைகேடாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கவும், முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை அகற்றவும் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து புன்னக்காயல் வரை சட்டவிரோதமாக எவ்வளவு மணல் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யவும், மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம் குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை அகற்றவும், சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் மனுதாரர் புகார் தெரிவித்துள்ள இடத்தில், மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? என்பது குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்.7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x