Published : 29 Sep 2021 04:14 PM
Last Updated : 29 Sep 2021 04:14 PM

இதயம் காக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை

உலக இதய தினமான இன்று இதயத்தைக் காக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி. போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் உலகில் அதிகம். ஆண்டுதோறும் இதய நோய்களால் 1.70 கோடிப் பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 2.30 கோடியாக உயரும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

இந்தியாவில் ஒவ்வோராண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதயம் தொடர்பான பிரச்சினைகளால் மரணமடைகிறார்கள். அதில் பெண்களின் எண்ணிக்கை சரிபாதி.

புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தால் இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்று உலக இதயக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக இதய நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ட்விட்டரில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்நாள் உலக இதய தினம்.

நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாகப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. முறையான உடற்பயிற்சி - விளையாட்டு என இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்!

வருமுன் காப்போம்'' என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x