Published : 13 Aug 2021 09:04 PM
Last Updated : 13 Aug 2021 09:04 PM

ரூ.3,890 மின்கட்டணம்: திருவோடு ஏந்தியும் காதில் பூ வைத்தும் மின்கட்டணம் செலுத்திய மதுரைக்காரர்

மதுரையில் ஏசி இல்லாத தன்னுடைய வீட்டிற்கு ரூ.3,890 மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்த ஒருவர், கையில் திருவோடு ஏந்தியும், காதில் பூ வைத்தும் மின்கட்டணம் செலுத்தச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் எம்.பி.சங்கரபாண்டியன். இவரது வீட்டிற்கு நடப்பு மாதம் ரூ.3,890 மின்கட்டணம் வந்துள்ளது. வீட்டில் ஏசி இல்லை. மின்விசிறி, டிவி மட்டும் உள்ளன.

வழக்கமாக இவரது வீட்டிற்கு ரூ.500 மின் கட்டணம் வந்துள்ளது. அப்படியிருந்தும் கூடுதல் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

அவர்களோ நேரில் வரச் சொல்லியுள்ளனர். அதனால், சங்கரபாண்டியன், கையில் திருவோடு ஏந்தியும், காதில் பூ சுத்தியப்படியும் கையில் கோரிக்கை பதாகையை ஏந்தியபடி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நூதன முறையில் மின்கட்டணம் செலுத்த சென்றார்.

அதிகாரிகளிடம் அவர், அதிகமான மின்கட்டணம் வந்ததிற்கான காரணத்தைக் கேட்டறிந்துள்ளார். அதற்கு அவர்களோ, ‘‘கரோனா தொற்று பரவியதால் நேரடியாக மின் பயன்பாட்டை அளவிட முடியவில்லை, அதனால் மொத்தமாக அளவீடு செய்துள்ளோம்.

தங்களுக்கு அதில் மாற்றுக் கருத்து இருந்திருந்தால் முன்கூட்டியே வந்து புகார் செய்திருக்கலாம்’’ என்றுள்ளனர். அதனால், வேறு வழியில்லாமல் சங்கரபாண்டியன், மின்கட்டணத்தை செலுத்திவிட்டு அதிகப்படியான மின்கட்டணத்தால் திருவோடு ஏந்தும் நிலைக்குத் தான் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் ஆதங்கத்தை தெரிவித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.

அவர் கூறுகையில், ‘‘மின்கட்டணம் கடந்த நான்கு மாத கணக்கெடுப்பு காரணமாக எனது வீட்டிற்கு ரூ.3,890 மின்கட்டணம் செலுத்துமாறு மின்கணக்கீடு வந்துள்ளது.

கடந்த கரோனா காலத்தைவிட அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளது. செல்லூர் பகுதியில் என்னைபோல் நிறைய வீடுகளுக்கு மின்கட்டணம் வந்துள்ளது.

மின்வாரியம் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தி மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து அமுல்படுத்த வேண்டும்.முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். அதை மக்களிடம் சென்றடையும் வகையில் ஏன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யவில்லை.

மின்வாரியம் பகீரங்கமாக மின்கட்டண கொள்ளை செய்துள்ளது. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக புரியாத காரணங்களை கூறுகின்றனர், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x