

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்தப் பதக்கங்களை வென்றுள்ள வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ.
இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
''ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும். வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் ஆனு, ரவிக்குமார் தஹியாவுக்கு தலா ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
அதேபோல் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி வழங்கப்படும். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய விளையாட்டுக்கு வெற்றி தேடித் தந்தமைக்கான கவுரவம் இது.
நமது வீரர்கள், வீராங்கனைகள் இந்தியாவை டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு இந்தப் பரிசை வழங்குவதில் பிசிசிஐ பெருமிதம் கொள்கிறது''.
இவ்வாறு ஜெய்ஷா கூறியுள்ளார்.