Published : 05 Aug 2021 10:34 PM
Last Updated : 05 Aug 2021 10:34 PM

அதிமுக மாறாத விசுவாசம் கொண்ட தலைவரை இழந்துவிட்டது: மதுசூதனன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல்

அதிமுக மாறாத விசுவாசம் கொண்ட தலைவரை இழந்துவிட்டது என மதுசூதனன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பின் மெல்ல உடல்நலம் தேறினார். பின், கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று (ஆக. 05) மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் காலமானார் என்ற துயரச்செய்தி அறிந்து ஆற்றொணா வேதனையடைந்தோம். அதிமுகவின் தொடக்க காலம் முதல் தனது இறுதி மூச்சு வரை தளராத பொது வாழ்வுப் பயணம் செய்தவர்.

சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். 1991 முதல் 1996 வரை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அதிமுக மாறாத விசுவாசம் கொண்ட தலைவரை இழந்துவிட்டது.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x