Published : 29 Jul 2021 03:36 PM
Last Updated : 29 Jul 2021 03:36 PM

விஷ வண்டுகள் கடித்தபோது ஓட முடியாததால் மாற்றுத்திறனாளி பலி: காயமடைந்த 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

கரூர் அருகேயுள்ள செட்டிபாளையம் அமராவதி அணை பூங்காவில் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷ வண்டுகள் கடித்ததால் மாற்றுத்திறனாளி தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், காயமடைந்த 70 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் அருகேயுள்ள செட்டிபாளையத்தில் அமராவதி தடுப்பணை உள்ளது. இங்குள்ள பூங்காவைச் சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்கள் 71 பேர் இன்று (ஜூலை 29-ம் தேதி) ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ராட்சசக் கூடு கட்டியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் பறந்துவந்து அவர்களைத் தாக்கின.

இதனைக் கண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் வேகமாக அங்கிருந்து தப்பி ஓடினர். வேகமாக ஓட முடியாத வயதானவர்கள் வண்டுகள் தாக்குதலுக்கு ஆளான நிலையில், அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கார்த்தி (47) ஓட முடியாததால் வண்டுகள் அவரைச் சூழ்ந்து தாக்கின. இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

கரூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வண்டுகளின் கூடு மற்றும் வண்டுகளைத் தீயிட்டு அழித்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கார்த்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x