உடுமலை அருகே தரமற்ற ரேஷன் அரிசியை வாங்க மறுத்துப் பழங்குடிகள் போராட்டம்

உடுமலை அருகே தரமற்ற ரேஷன் அரிசியை வாங்க மறுத்துப் பழங்குடிகள் போராட்டம்
Updated on
1 min read

உடுமலைப்பேட்டை அருகே மலை கிராமங்களில் வழங்கப்பட்ட தரமற்ற ரேஷன் அரிசியை வாங்க மறுத்து, பழங்குடியினர் போராட்டம் நடத்தினர்.

உடுமலைப்பேட்டை வட்டம், மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்விரு கிராமங்களுக்கும் சேர்த்து மாவடப்பு கிராமத்தில் வைத்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குவது வழக்கம். இதற்கு முன்னர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காடம்பாறையில் இம்மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக அரசின் ரேஷன் பொருட்கள் ஊருக்கே வந்து வழங்கப்பட்டு வந்த நிலையில், 3 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாக உள்ளதாகவும், அரிசியைச் சமைத்துச் சாப்பிட முடியவில்லை என்றும் மலைவாழ் பழங்குடி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, ''ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் உங்களுக்கு நல்ல அரிசி வழங்குகிறோம் என்று கூறிக்கூறியே ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டிய 35 கிலோ அரிசியை மாதத்தின் இறுதி நாட்களில் வழங்கினர்.

இன்று காலை எங்களுக்கு வழங்கப்பட இருந்த அரிசி முற்றிலும் தரமற்றதாக இருந்தது. இதனை வாங்க மறுத்து, ரேஷன் அரிசி வழங்கும் அரசு ஊழியர்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம்'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in